பொன்னுக்குட்டி!(1)

                                                               


 
ஓவியர் :எட்வார்ட் முங்க் 
Edvard Munch (1863-1944)
பொன்னுக்குட்டி!


Levande norsk 6. skuleår பொத்தகத்திலிருந்து

நொர்ஷ்க்(நோர்வேஜியன்) மூலம்:JACOB  B.BULL                                
தமிழாக்கம்: ந.குணபாலன்


கதைக்களம்: மலையும்,வயலும்,காடும்,கடலும், அருகருகே காணப்படும்
வடபுலவழி(NOR(TH) WAY) ஆன நோர்வே நாடு.
கதைக்காலம்: ஒரு நூறு நூற்றைம்பது ஆண்டுகளின் முன்னே.
                                                       
பாதிரிமாளிகை 
                                                                                 
                                                                                                   அந்த நாளைகளில் எங்கள் தகப்பனார் இசுத்திரண்டால் கோயிற்பற்றிலே பங்குத்தந்தையாக இருந்தவர். பணிய (lower) இசுத்திரண்டால் கிராமத்திலே ஒரு பெரிய பாதிரிவளவு இருந்தது. என்னுடைய சின்னவயசுப் பராய காலத்திலே நாங்கள் அங்கே குடியிருந்தோம். பாதிரிவளவிலே பெரியதொரு பாதிரிமாளிகை, பணியாளர் குடிமனை, கால்நடைக் கொட்டாரம், குதிரைமால், கொல்லுப் பட்டறை, கலப்பை முதலிய கருவிகள் வைக்கும் கொட்டில்,கூரை உச்சியில் மணியுடன் தானியக் களஞ்சியம் எனப் பல கட்டடங்கள் இருந்தன.
                                                                             ம

உணவுக்களஞ்சியம்
படியளக்கும் தாயார் மதிய உணவு, வேலைநாள் முடிவு என்பவைகளை அறிவிக்கும் பொறுப்புடையவர்!
படம்:இற்றின்சேத்து காமம் என்ற ஊரின் பொத்தகம் 


 கால்நடைக் கொட்டாரத்திலே ஒரு பத்துப் பன்னிரண்டு பசு, இரண்டு நாம்பன் மாடு, கிடாயும் மறியுமாக ஒரு இருபது மட்டில் கம்பளியாடு , இரண்டு,மூன்று சாவல் ,ஒரு பதினைந்து பேட்டுக்கோழி, ஏழெட்டு பன்றி என்று நிறைந்து இருக்கும். பாதிரிவளவிற்கு சேருமதியான கமத்து நிலத்தில் வேலைக்கும், மற்றவெளி வேலைகளுக்கும், என்று நாலு குதிரை இருந்தது.        

கால்நடைக்கொட்டாரம்
படம்:இசுரைன்சார் கலைக்களஞ்சியம்



                                                                             





பணியாளர் குடிமனை - படம்: இசுக்கெட்சுமூ உள்ளூர்ச் சரித்திர சங்கம்


அந்தக் குதிரைகளில் பொன்னுக்குட்டியும் ஒன்று. பொன்னுக்குட்டி; பாதிரிவளவில் பாதி செல்லப்பிள்ளை , பாதி செல்வாக்கின் சின்னம். யாரென்றாலும் பொன்னுக்குட்டியை தொட்டுத் தடவி மேலைத் தேய்த்துமெருகூட்டலாம், தீன் கொடுக்கலாம். ஆனால் பாதிரிவளவின் தலைமைப் பணியாளான ஊலா யோன்சன் மட்டுமே பொன்னுக்குட்டியைத் தொட்டுச் சேணமிடவோ; வண்டியிற் பூட்டவோ முடியும். குதிரைச் சவுக்கு அதன் மேலிலே பட்டதேயில்லை. ஊலாவுக்கு அதில் இட்டமேயில்லை. அடங்காப் பிடாரியான குதிரைக்குத்தான் சவுக்கடி தேவையாம்; ஊலா சொல்லுவார்.

தெருவாலே, வழியாலே இன்னொரு குதிரைவண்டி பொன்னுக்குட்டிக்கு முன்னாலே முந்தியடித்துக் கொண்டு போகட்டும் பார்ப்போம். பொன்னுக்குட்டி விடமாட்டாது. பாதிரிவளவில் வளர்ந்த பொடியன்களான எங்களுக்குக் குதிரைவண்டிச் சவாரி என்றால்; அதுவும் பொன்னுக்குட்டி வண்டி இழுக்குமென்றால் பிறகு என்னத்தை பறைவான்?ஒரே புளகமும், பெருமிதமும் தான். குறிப்பாக நத்தார்க்காலத்து நடப்பைப் பற்றிச் சொல்லவேண்டும். நத்தார்க்காலம், வடந்தைக்காலம் (winter) . சிந்து (snow) பெய்து அனைத்துமே வெண்மையாக இருக்கும். கூதிர்காலத்தில் இலையாடை களைந்து தவக்கோலம் கொண்ட மரவகையும், பிறத்தியார் முன்னே ஆடை மாற்றவே விரும்பாத தேவதாரு(pine) மரவகையும் வெண்ணிறத்தில் சிந்து ஆடை அணிந்து தேவதைகளாக மாறியிருக்கும். வீடுவாசல், வழிவாய்க்கால், கோயில்குளம் என்று எங்கே பார்த்தாலுமே சிந்து படிந்து வெண்மையாக இருக்கும். கதழ்வண்டிகளை (sledge) குதிரைகள் இழுக்கும்.

நத்தார்ப் பூசை முடிய அனேகமாக மற்ற எல்லோரும் வெளிக்கிட்ட பின்னே பாதிரிவளவின் வண்டியை இழுத்துக்கொண்டு பொன்னுக்குட்டி கிளம்பும். முன்னாலே ஒரு பத்துப்பன்னிரண்டு கதழ்வண்டியும், குதிரையும் போய்க்கொண்டிருக்கும். சும்மா விடுமே பொன்னுக்குட்டி? சும்மா காற்றுப் போலே கடுகதியில் பறக்கும். ஆடைக்குள் மறையாத முகத்தை வடந்தைக்குளிரைச் சேர்த்துக் காற்று அறைந்து உரஞ்சும். ஊசியாகிக் குத்தும் குளிர்காற்றுப் பட்டுக் கண்ணிலிருந்து வடியும் கண்ணீர் கீழிறங்காமல் பின்னே காதை நோக்கிச் சிதறும். செவிமடல் விறைத்துச் சிவக்கும். காற்றாகிக் கடுகி விரையும் கதழ்வண்டியைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சியில் அந்தக்குளிரிலும் பொடியாக வேர்வை அரும்ப ஒரு அரசனின் கம்பீரத்துடன் ஊலா யோன்சன் வண்டியைச் செலுத்துவார். பாதிரிவளவின் வளைவிலே ஆலியாக(ice) இறுகி உறைந்து போயிருக்கும் துரவைத் தாண்டும்போது "முக்கால்வாசி ஊரை இண்டைக்கும் வெண்டாச்சு" என்று கூவுவார்.
                                                                                           
ஓவியர்: Fritz  Thaulow (1847 -1906 )நோர்வே 
                                                                            


 பொன்னுக்குட்டி சின்னப் பிள்ளைகளுடன் நல்லாக அணையும்.எனக்கு நேரே இளையவனான யுகான்னெசு மீது பொன்னுக்குட்டிக்கு தனிப் பட்சம். யுகான்னெசு கிட்டப் போனால் காணும். அவன் தலையை உடம்பை மணக்கும், நக்கும்.அவனும் பொன்னுக்குட்டியின் கழுத்தைக் கட்டிப் பிடிப்பான், உடம்பைத் தேய்த்துமெருகூட்டுவான், தீன் கொடுப்பான், கொஞ்சிக் கொஞ்சி செல்லம் பொழிவான், கதைப்பான்.பொன்னுக்குட்டியும் சின்னஞ்சிறிய சீறல்கள் தலையாட்டல்கள் எல்லாம் போட்டபடி ஏதோ ஒருவகையில் அவனுடன் கதைக்கும். மற்றும்படி சிலநேரம் அவன் பிடரிமயிரை, வாலை பிடித்து இழுத்து பண்ணும் அரியண்டம் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளும்.காலத்தின் கணக்கும் ; பொன்னுக்குட்டியின் விதியை யுகான்னேசுவுடன் முடிச்சுப் போட்டிருந்தது அப்போதுஆருக்குத்தான் தெரியும்?
                                                
அந்தமுறை வடந்தைக்குளிர் கடுமையாக வாட்டி வதைத்தது. அடுத்துத் தொடுத்து மாசக் கணக்கிலே வடந்தைக் குளிர் மறை எண் நுப்பது நுப்பத்தஞ்சுக்கிடையில் ஊசாடிக் கொண்டிருந்தது. பாதிரிவளவின் வேலியை அண்டி அற்புதமானதொரு சிற்றருவி பாய்கிறது. கொஞ்சம் ஒரு பா (plate) போல நீட்டிக்கொண்டிருக்கும் பாறையும், அதிலே வழியும் அருவியும் ஒரு கனவுலகத்தைக் காட்டும். கூரையாக அமைந்த பாறையும் பாதுகாப்பானதாக இருந்தது.வழமைபோல் வடந்தைக்காலத்தில் சிற்றருவியும் ஆலியாகி(ice) உறைந்து போனது. மேலிருந்து கீழே பாய்ந்து உறைந்த அருவி ; அற்புதமான தூண்களாக.....,சுவராக......,தொங்குதிரையாக.....,தோரணங்களாக....,
மாயமானதொரு பளிங்கு மாளிகையாக....,பலவிதமான தோற்றங்களை எங்கள் மனக் கூத்துக்களுக்கு ஏற்றபடிகாட்டும். நாங்களும் மாயமந்திரக் கதைகளின் பாத்திரங்களாக மாறி விளையாடுவோம். அம்மா வந்து அதட்டிக் கூப்பிடும் வரை;நேரகாலம் தெரியாது...,விறைக்கும் குளிர் உறைக்காது..., வேளைகாலத்தோடு மெல்லப்பரவும் இருட்டும் வெருட்டாது. ஆலியாகிப் பளிங்காகி உறைந்துபோன ஆற்றுப்படுக்கையும் பலவிதக் கதைகளைப் பறையும்.ஆற்றுப் படுக்கையை உற்று ஊடுருவிப்  பார்த்தால் கருமையாக மருமங்கள் நிறைந்த நீரோட்டத்தையும் ஆழத்தில் காணலாம். கீழே காது வைத்துக் கேட்டால் செவிகளிலே தன் மன ஆழத்தின் மருமச் சங்கதிகளைஅது மெல்ல ஓதும்.
 
                                                                                
எனக்குப் பத்து வயசு.யுகான்னேசுக்கு அப்போது ஐந்து வயசு. ஒரு பல் விழுந்துவிட்டது. பள்ளிக்குப் போகும் பராயம் வந்து விட்டது என்று அம்மா அடிக்கடி சொல்லுவா. கோடை முடிய பள்ளியிலே சேர்க்கலாம் என்று அப்பா சொன்னார். ஆற்றுப் படுக்கையில் விளையாடப் போய்த்தான் யுகான்னெசுக்குட்டி வருத்தம் தேடி வந்தான். நுப்பத்தொன்பது நாற்பதிலே அனல் பறக்கக் காய்ச்சல், முட்டுத் தடிமன், மூச்சு கொறகொற என்று இழுக்க இருமல்.... ஐயோ! உது வேறொன்றுமில்லை . ஊருக்குள்ளே பாலர், விருத்தர் என்று இன்னார் இனியார் என்று பாராமல் படுக்கையில் போட்ட பயங்கர வருத்தமேதான். சில வயசு போன சனங்களையும் பரலோகம் அனுப்பின சளிச்சுரம் தான் அது ஒரு பரிகாரியை அவசரத்துக்குப் பிடிக்க வேண்டுமென்றாலும் , ஐம்பது கட்டை தூரத்தில் இருக்கும் தீன்சேத்துக்குத் தான் போக வேண்டும்.

யுகான்னெசுக்குட்டி வருத்தத்தில் விழுந்து மூன்றாம் நாள். இருள் விலக விருப்பமில்லாமல் பொழுதை இறுக்கி கட்டிப் பிடித்திருக்கும் வடந்தைப் பருவத்துக் காலை நேரம். அன்றைக்கு என்று பார்த்து ஆலிக்கட்டிகளை அறைந்து வீசியபடி சுழிக்காற்றுடன் புயல் அடித்தது. அப்பா பதற்றத்துடன் ஊலாவின் குடிமனைக்குள் நுழைந்தார். ஊலா காலைத்தீனைத் தின்று முடிக்கவில்லை.
"ஊலா! நீ இப்ப உடனடியாப் பரியாரியாரைக் கூட்டிவர வெளிக்கிடு"
கதவினருகேயே நின்றபடி அப்பா சொன்னார்.
"நிலைமை என்ன மோசமே தேவரீர்?" ஊலா கேட்டார்.
"ஓம் கொஞ்சம் பயப்படும் படியாத்தான் கிடக்கு"
ஊலா கடைசி மூன்று வாய் சாப்பாட்டையும் அவதியவதியாகத் திணித்தார். கரண்டியைக் கையால் துடைத்து விட்டு எழுந்தார்.
"இப்ப வெளிக்கிட்டு எப்ப மட்டிலை திரும்புவாய் ஊலா?" அப்பா கவலையுடன் கேட்டார்.
"சொல்லத் தெரியேல்லை.போகவர நூறுகட்டைக்குக் குறையாமல் ஓட்டம். வடந்தைக்காலத்திலை வழமையாகவே தீன்சேத்துக்குப் பாதை உதவாது. பத்தும் பத்தாததுக்கு இண்டைக்கு எண்டு பார்த்து ஆலிப்புயலும் சுழட்டி அடிக்கிது" என்று இழுத்தார் ஊலா.
"அப்பிடி எண்டால் நாளைக்கு வெள்ளாப்புக்கு முன்னம் வரேலாது. இல்லையே?"அப்பாவின் முகத்தில் பயம் அப்பியது. ஊலா ஒரு நுணுத்தம் (நிமிடம்) யோசித்தார். பிறகு ஒரு தெளிவுக்கு வந்து;
"பொன்னுக்குட்டியைக் கூட்டிப் போவம் தேவரீர்!" என்று அப்பாவின் மனதை ஆறுதல் படுத்தத் தெண்டித்தார். அப்பா நாலு எட்டு நடந்தார், நெற்றியைத் தடவிக் கொண்டார்;
"அப்ப இரவைக்கு முன்னம் வந்திடலாமே ?" என்று கேட்டார்.
"என்னாலை ஏலுமான மட்டிலை வலு கெதியிலை வரத் தெண்டிக்கிறன்" என்று ஊலா கம்பளியும் தோலுமான வெளியாடைகளை பக்குவமாக அணிந்து கொண்டார்.
"ஓமடாப்பா. உனக்குப் புண்ணியமாப் போடும். சுறுக்கா வரப்பார். ஒரு உசிரைக் காப்பாத்திற காரியமெல்லே?" கெஞ்சுவது போல கேட்டார் அப்பா. 
"தேவரீர் கவலையை விடுங்கோ. கர்த்தர் காப்பாத்துவார்"
                                                        

ஊலா குதிரைமாலில் இருந்து  பொன்னுக்குட்டியைக் கூட்டிவந்தார். மற்றப் பணியாளர் பாரம் குறைந்த கதழ்வண்டியைக் கொண்டு வந்தனர். வண்டியிலே பொன்னுக்குட்டியை ஊலா பூட்டினார். சலங்கை மாலையும் கழுத்துமாக என்றைக்குமில்லாத பொலிவும், செந்தலிப்புமாக பொன்னுக்குட்டி இருந்தது. அதன் கருவிழிகள் அழகாகப் பளபளத்தன. அப்பா திரும்பவும் அவதியாக வெளியே ஓடிவந்தார்.
"நிலைமை எக்கச்சக்கமாகப் போய்க்கொண்டிருக்கு ஊலா. எம்மளவுக்குக் கெதியா வண்டிலை ஓட்டேலுமோ அம்மளவுக்குக் கெதியா ஓட்டு"   
"சரி தேவரீர்!" ஊலா மூக்கணாங்கயிற்றைப் பற்றினார்.
"கொஞ்சம் பொறு ஊலா!" அப்பா குதிரைமாலுக்குள் ஓடிப்போய்ச் சவுக்கை எடுத்து வந்து நீட்டினார்.
"இண்டை மட்டுக்கு இதைப்பாவி. வாற பாவம் என்னை வந்து சேரட்டும்"
"தேவை எண்டால் பார்ப்பம்"என்ற ஊலாவின் குரலில் எரிச்சல் தெரிந்தது. பொன்னுக்குட்டியை அப்பா தடவினார். நானும் முகத்தோடு முகம் வைத்து தலையை,உடம்பைத் தடவி பயணம் அனுப்பினேன்.
"ம், சுறுக்காப் போய் சுறுக்காத் திரும்பி வாங்கோ. கர்த்தர் உங்களோடை துணை வருவார்" சிலுவைக்குறி இட்டு வாழ்த்தி அனுப்பினார் அப்பா. வண்டி வெளிக்கிடவும் மணி ஆறு அடிக்கவும் சரியாக இருந்தது .

அன்றைய பொழுது ஒரு சுமையான நீண்ட பொழுதாக வீட்டிலிருந்த எங்களுக்கும், வடந்தைப் புயலையும் பாராது வெளியே சென்ற ஊலாவுக்கும் பொன்னுக்குட்டிக்கும் ஆகிப் போனது. வருத்தத்தின் அகோரத்தில் தம்பி யுகான்னெசு வாடிய கொடிபோலத் துவண்டு போய்க் கிடந்தான். நேரம் போகப்போக ஆபத்து அதிகரிப்பதை என் பெற்றோர் முகங்கள் காட்டின. அதை விளங்கிக் கொள்ளக் கூடிய பராயந்தான் எனக்கும். அச்சம் என்னைப் பிடித்து உலுப்பியது. மனத் திரையில் பல பயங்கரப் படங்கள் விரிந்தன. இழவுவீடு...,சவக்காலை..., சவ அடக்கம்..., பரியாரியார்..., மருந்துக் குளிகைகள் குடிநீர்..., யுகான்னெசுவின் கூத்து குழப்படி..., அம்மாவின் சிரிப்பு..., எல்லாமே வந்து போயின.

இப்படியான பற்பல நினைவுகளிலும் அல்லாடியபடி வெளியே வந்தேன். புயல் பின்னேரம் நாலு மணியின் மேலே கொஞ்சம் குறைந்தது. ஆனாலும் அடிக்கடி ஆலிக்கட்டிகளை வாரியடித்துச் சேட்டை விட்டபடி இருந்தது.குளிருக்குத் தலையைக் காதுகளைப் பாதுகாக்கும் கம்பளிக் குல்லாயும் இல்லாமல் , செவிமடல் இரண்டும் குளிரில் விறைத்துப் பகபக என எரிய.., கண்ணால் வழிந்த கண்ணீர் கன்னத்தில் உறைய.., எனக்கு எதுவும் உறைக்கவில்லை.காதிரண்டும் பொன்னுக்குட்டியின் சலங்கைச் சத்தத்தை நாடித் தவித்தன.
"பொன்னுக்குட்டி இரவுக்கு வந்திடும்...இரவுக்கு வந்திடும்..." என்று இடைக்கிடை மென்மையாகத் தவழ்ந்த காற்று காதிலே ஓதுவது போலே இருந்தது. ஏதாவது அற்புதத்தை நடத்தி என் தம்பியைப் பிழைக்க வைக்கும்படி கர்த்தரை மன்றாடியபடி நின்றேன்.
                                                                                                                                       (தொடரும்)



கால்நடைக் கொட்டாரம்-farm house
நாம்பன்-காளைமாடு
கமத்துநிலம்-விவசாயநிலம் 
மேல்-உடம்பு
மெருகூட்டல்-polish  செய்தல் 
தீன்-உணவு 
புளகம்-புளுகம்,மகிழ்ச்சி
என்னத்தைப் பறைவான்?-என்னத்தைச் சொல்வது?

தமிழ் ஆர்வலர்,ஆய்வாளர் இராம.கி அவர்களின் பரிந்துரைப்படி 
வடந்தை-winter
சிந்து-snow
ஆலி-ice
கதழ்வண்டி-sledge 
நுணுத்தம்-நிமிடம் 

துரவு-சிறு நீர்நிலை,குட்டை
அணையும்-சேரும்
பட்சம்-அன்பு
அரியண்டம்-தொந்தரவு
மாசக்கணக்கிலே  -மாசங்களாக 
மறை எண் -minus எண் 
நுப்பது- முப்பது
பா-plate 
வேளைகாலத்தோடு-நேரம் முந்தி
செல்லம் பொழிவான் - ஆசையாக அன்பாக கதைப்பான் 
பாலர் விருத்தர் -பிள்ளைகள் முதியோர்
இன்னார் இனியார்-வேண்டாதவர் வேண்டியவர் 
பரிகாரி-வைத்தியர்
கட்டை-ஆங்கில அளவு முறையில் மைல்
வருத்தம்-நோய் 
எப்ப மட்டிலை- எந்நேரம் அளவில் 
தெண்டித்தல்-முயற்சித்தல்
இரவைக்கு-இரவுக்கு
வெள்ளாப்பு-அதிகாலை 
செந்தலிப்பு-செந்தளிப்பு,செழிப்பு 
சுறுக்கு-விரைவு
கெதியாக-கதியாக,விரைவாக
பாவி-பிரயோகி

  

Kommentarer