சித்தாண்ட மாய்- மே பதினேழு! நோர்வேயின் தேசிய தினம்!
சித்தாண்ட மாய் என்று நோர்வே மக்கள் நோர்வேயின் தேசியதினத்தைச் சொல்லுவார்கள். 1814ம் ஆண்டின் இளவேனிற் காலத்திலே எய்ட்சுவொல் (Eidsvoll) எனுமிடத்திலே அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுவதற்காக ஒரு குழு கூட்டப் பட்டிருந்தது. அதற்காக நோர்வேநாடு முழுவதிலுமிருந்து குமுகத்தில் மதிப்புப் பெற்றிருந்த சிலர் அரசியலமைப்புச்சட்ட அவையில் (Grunnlovsforsamlingen) அங்கம் வகிக்கத் தெரிவுசெய்யப் பட்டிருந்தனர்.
அரசியலமைப்பு உருவான எயிட்சுவொல் மாளிகை |
அந்தநேரத்தில் நாலு நூற்றாண்டுகளாக நோர்வேநாடு, டன்மார்க் நாட்டினது ஒரு மாகாணமாக இருந்தது. நெப்போலியனுடன் கூட்டுச் சேர்ந்திருந்த டன்மார்க், நெப்போலியனின் தோல்விக்குப் பின்னாலே நோர்வேயைப்; பிரித்தானியாவின் கூட்டாளியான சுவீடனிடம் ஒப்படைக்க வேண்டிய நிலைமை உருவானது. நோர்வேயார் அதை அடியோடு வெறுத்தனர். மீண்டும் நோர்வேயைத் தன்னாட்சி உடைய ஒரு நாடாக்க விரும்பினர். தம்விதியைத் தாமே தீர்மானிக்க முடிவெடுத்தனர். அதற்காகவே தெரிவுசெய்யப் பட்ட அரசியலமைப்பு அவை கூடி நோர்வேயின் சொந்த அரசியலமைப்பை உருவாக்கினது. 1814ம் ஆண்டு மீ 17ந் திகதி நோர்வேயின் அரசியலமைப்புச் சட்டம் (Norges Grunnlov) கைச்சாத்தானது.
அத்துடன் டன்மார்க்கின் இளவரசனான கிறிஸ்ரியான் பிரெட்ரிக் (Christian Fredrik) நோர்வே மன்னராகத்தின் தெரிவு செய்யப் பட்டார். ஆனால் நோர்வேயின் தன்னாட்சி பெறும் முயற்சி முளையிலேயே கிள்ளப் பட்டது. தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் வரவேண்டிய நோர்வேயை டன்மார்க்கின் அரச குடும்பத்தின் ஒரு வாரிசிடம் இழந்துபோக சுவீடன் விரும்பவில்லை. மிகவும் குறுகிய சண்டையின் பின்னே செய்த ஒரு ஒப்பந்தத்தின் படி சுவீடனின் மேலாதிக்கத்துக்கு நோர்வே கசப்புடன் இணங்கினது.
1906ம் ஆண்டு மீ 17ந் திகதி முதல் ஆண்டுதோறும் சித்தாண்ட மாய் தினத்தில் அரமனைப் பலகணியில்


அரசியலமைப்புச்சட்ட அவை; எய்ட்சுவொல். ஓவியர்:ஒசுகார் ஆர்னோல்ட் வெர்கெலான்ட் Oscar Arnold Wergeland(1814-1910) |
நோர்வேஅரசர் என்ற மேலாண்மையும் வெளிநாட்டுறவும் சுவீடனின் பிடிக்குள் போனது. சொந்த நாடாளுமன்றத்துடன்(Stortinget) மட்டுப்படுத்தப் பட்ட தன்னாட்சியுடனான நாடாக நோர்வே உருவானது. சுவீடனின் அடக்குமுறையை எதிர்ப்பை அவ்வப்போது எதிர்கொண்டாலும் எதோ ஒரு வகையில் 1815ம் ஆண்டிலிருந்து "சித்தாண்ட மாய் " கொண்டாடப்பட்டு வந்தது. நோர்வே நாடாளுமன்றமும் 1836ம் ஆண்டு முதன்முறையாக "சித்தாண்ட மாய்" ஐக் கொண்டாடினது.
1905ம் ஆண்டு சூன் 7ந் திகதி தன்னிட்டவாரம் நோர்வே நாடாளுமன்றம், நோர்வே தனிநாடு ஆகியதென ஒருதலையாக அறிவித்தது. சுவீடனும் எல்லையில் படை குவித்தது. ஆனாலும் ஒன்றும் செய்யாது படையைத் திருப்பிக் கொண்டது. பிரித்தானியாவின் ஆதரவு, ஆசியை நாடிப் பிரித்தானியாவின் ஒரு இளவரசியை மணந்த டன்மார்க் இளவரசனைத் தன்னாட்சி பெறும் நோர்வேயின் மன்னராகவும் அரசியாகவும் ஆக்கிட முடிவானது.
ஆனால் அந்த இளவரசன், நாடளாவிய வாக்கெடுப்பில் தம்மை மன்னராக ஏற்றுக் கொள்ளப் பட்டால் மட்டுமே தாம் அப் பதவியை ஏற்றுக் கொள்வேன் என ஒரு நிபந்தனை விடுத்தார். அதன்படி நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு அவருக்குச் சாதகமாக அமைந்தது. நோர்வேமொழி கதைக்கத் தெரியாத இந்த இளந்தந்தையும், இரண்டே வயசான மகனும், முற்காலத்து நோர்வேயின் அரசப்பெயர்களைப் பெற்றுக் கொண்டனர். தந்தை இளவரசன் கிறிஸ்ரியான் பிரெட்ரிக் கார்ல் (Prince Christian Frederik Carl) ஏழாம் கோக்கோன் மன்னர் (Kong Haakon 7.) ஆனார்.
மகன் அலெக்சாண்டர் (Alexander) இளவரசன் ஐந்தாம் ஊலாவ் (Prince Olav 5.) எனப்பட்டான்.
அரசி மௌட்,இளவரசன் 5ம் ஊலாவ்,மன்னர் 7ம் கோகோன் |
1906ம் ஆண்டு மீ 17ந் திகதி முதல் ஆண்டுதோறும் சித்தாண்ட மாய் தினத்தில் அரமனைப் பலகணியில்
நின்று உசுலோ மாநகரப் பள்ளிச் சிறாரின் அணிவகுப்பை வாழ்த்துக்களை அரச குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளுவது வழக்கமாகிப் போனது. 1910ம் ஆண்டில் அரசி மௌட் இன் தந்தையும் பிரித்தானிய மன்னருமான ஏழாம் எட்வேட் காலமானபோதும், நாசிகளின் ஆட்குமிப்பில் 1940-45ம் ஆண்டுகள் வாக்கிலும் இது நடக்கவில்லை.நோர்வே சட்டவரைவுகளுக்கு உட்பட்ட முடியாட்சியை (Constitutionel Monarchy) உடையது.
![]() |
அணிவகுப்பை ஏற்கும் அரச குடும்பத்தினர் |
சித்தாண்ட மாய் தினத்தில் பிறநாடுகளைப் போல அரசியல் பரப்புரைகளுக்கும் (propaganda) அரணத்தின் (military) வீரதீர இறுமாப்புக்கும் இடமில்லை. முழுக்க முழுக்க மக்கள் கொண்டாட்டம்
மட்டுமே. அதிலும் முன்னணியாக நிற்பது சிறார்களுக்கான நிகழ்வுகளே.
(உசுலோவில் அரமனையை நோக்கிச் செல்லும் கார்ள் யுகான் வீதியில் பள்ளிச்சிறார்களின் அணிவகுப்பு)
சித்தாண்ட மாய்க் கொண்டாட்டம் உசுலோவுக்கும் பிற பெருநகரங்களுக்கு மட்டுமே உருத்தானதில்லை. நோர்வே நாட்டின் இண்டைஇடுக்கு மூலைமுடுக்கு எல்லாமே திருநாள் தான். அன்றைய காலநிலையோ இல்லை ஊர்களின் அமைப்போ,சன நெருக்கக் குறைவோ ஊர்வலம் போவதையும் கொண்டாட்டம் அமைப்பதையும் தடை செய்ய மாட்டாது.
நோர்வேயின் பிறந்தநாள் என்று சிறார் மகிழ்வர். பள்ளிக்கூட வாத்தியக் குழுக்களும் (school band) ஆடலணிநடைக் குழுக்களும் (drill groups) சித்தாண்ட மாய் ஊர்வலங்களில் முன்னணியில் வண்ணஞ் சேர்க்கும்.
உயர்கல்வியை முடிக்கவுள்ள மாணவர்கள் (17,18 வயசினர்) தங்கள் மூன்றாண்டுக் கல்விக்காலம் எதிர்வருஞ் சூன் மாசத்துடன் முடிவத்தைக் குறிக்கு முகமாகக் கொண்டாடுவர். இதை றுசு (russ) கொண்டாட்டம் என அழைப்பர். இவர்களது அமளி மார்ச்சு மாசமே ஆரம்பித்து விடும். பழைய வாகனங்களை விலைக்கு வாங்கி திருத்தி வாகனக் கட்டுப்பாட்டு ஆய்வுக்கு அனுப்பி அனுமதி பெற்று சிவப்பு நீலச் சாயங்கள் பூசி அட்டகாசமாகத் திரிவர். இவர்களது சீருடை நிறங்கள் அவரவர் கல்விப் பிரிவுகளை காட்டும். இவர்களது பணச்சிலவு மிக்க ஒன்றுகூடல்களும், பாட்டு கூத்து குடி எல்லாம் பிறநாட்டவரால் விளங்கி கொள்ள முடியாதவை. கிறித்துவ மதப்பற்றுள்ள மாணவரும், மற்றும் குறிப்பிடத்தக்க தொகையளவான மாணவர்களும் மதுவைத் தீண்டாது வரம்பு மீறாது கொண்டாட்டங்களில் கலந்து கொள்வர் என்பதையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.
பற்பல கிராமங்கள், ஊர்கள், நகரங்கள் எல்லா இடங்களிலும் சிறாரின் ஊர்வலம், மக்கள்
ஊர்வலம் என்று இரண்டு ஊர்வலங்களோ; அல்லது எல்லாரும் சேர்ந்த ஒரு ஊர்வலமோ இருக்கும். ஊர்வலத்தில் தேசிய உடை அணிந்தவர்கள் நோர்வேக் கொடிபிடித்து முன்னே நடப்பர். அடுத்து (இருக்குமென்றால்) ஆடலணினடைச் சிறுமியர் ஆடியாடி அணிநடை நடப்பர். பள்ளிக்கூட வாத்தியக் குழுவினர்,அணிநடைகீதங்களும், தேசியகீதமும் இசைப்பர்.
பிள்ளைமடுவத்து(nursery)பாலகர்கள், பள்ளிக்கூடப் பிள்ளைகள் வகுப்பு வகுப்பாக தத்தம்
பதாகைகளுடனும் கொள்கை வாக்கியங்களை பாடியபடியும் செல்வர். இறுதியாக றுசு மாணவர்கள் செல்வர். மக்கள் ஊர்வலங்களிலே (Band)வாத்தியக் குழுவினர் இசைக்க, தொண்டர் அமைப்புக்கள், செஞ்சிலுவை சங்கம், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வர். ஊர்வல ஆரம்பத்தில் அல்லது முடிவில் தேவாலயங்களில் தேசியதின ஆராதனைகள் நடைபெறும்.
நாட்டுக்காகப் பாடுபட்டவர்களின் நடுகற்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்வர். தேசியதின உரை, கலைநிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள், பெரியவர்கள் பங்கு பெற விளையாட்டுப் போட்டிகள் அமைக்கப் படும்.
அநேகர் பூநாட் (Bunad) எனப்படும் பெருநாட்களுக்குரிய தேசிய உடைகளை அணிவர். இந்த பூநாட் டின் வடிவம், பூவேலைப்பாடு, வண்ணம் எல்லாம் மாவட்டத்துக்கு மாவட்டம் மாறுபடும். அநேகர் தங்கள் பிள்ளைகளுக்கு இந்த பூநாட் டினை அதற்குரிய வெள்ளியாலான அணிகலன்களுடன் அவர்கள் தேவாலயத்தில் சற்பிரசாதம் பெறும் திருநாளில்(14 வயசில்) அணிவதற்குப் பரிசளிப்பர்.
சிறுவருக்கான திரைப்படம் திரையரங்குகளில் கட்டணமின்றிக் காண்பிக்கப் படும். இவ்வாறு அந்த நாளின் நிகழ்ச்சி நிரல் அமையும்.அதனை அமைக்கும் செயற்குழுவை ஆண்டு தோறும் புதிதாகச் சுழற்சி முறையில் தெரிவு செய்வர். (உதாரணம்:எட்டாம் வகுப்பு மாணவர்களும் பெற்றோரும்)
இப்படியாக நாள் முழுவதும் பார்வையாளர்களாக மட்டுமல்ல, பங்கு பற்றுபவர்களாகவும் நோர்வே மக்கள் கொண்டாடுவர். இந்நாளின் வாழ்த்துக்கள் என்ற பொருள்பட ஒருவருக்கொருவர் அறிமுகமே இல்லாதவருக்கும் ("GRATULERER MED DAGEN!") "கிறாத்துலேறர் மே டாகென்"என்று வாழ்த்திக்கொள்வர். நாளின் முடிவில் அடுத்த சித்தாண்ட மாய் எப்போது வரும் என்று சிறுவர் முதல் பெரியவர் வரை காத்திருப்பார்.
வடநோர்வேயின் ஆதிக் குடிகளான சாமி இன மக்களும் தங்களின் தேசியக் கொடி, தேசிய உடைகளுடன் சித்தாண்ட மாய் கோலாகலத்தில் கலந்து கொள்வர்.
நோர்வேயில் வந்தேறு குடியினரான எம்மைப் போன்ற பிறஇன மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஒரு திருநாள்தான்
"சித்தாண்ட மாய்" .
"வந்தார்க்கும் வரத்தார்க்கும் பூத்தாயோ புன்னைமரம்?"
கொறோனா முடக்கத்திலும் சென்றவரியம் நானிருக்கும் ஊரில் நடைபெற்ற சித்தாண்ட மாய்க் கொண்டாட்டத்தின் காணொளி வடிவம்.
https://www.facebook.com/100002781551909/videos/2364281093674586/
அனைவருக்கும் வருகின்ற சித்தாண்ட மாய் தினத்தையிட்டு இந்நாளின் வாழ்த்துக்கள் உரியதாகுக.
Kommentarer
Legg inn en kommentar