யூல்- நோர்வே நாட்டின் நத்தார்!

யூல்நோர்வே நாட்டின் நத்தார்!


நத்தாரைக் குறிப்பிடும் யூல் என்ற சொல் நோர்வேயில் மட்டுமல்லாது ;

டன்மார்க்

சுவீடன்

பின்லாந்து

ஐசுலாந்து 

பாரோய் தீவுகள்(இவை இசுக்கொட்லாந்துக்கு வடக்கே நோர்வேக்கும்ஐசுலாந்துக்கும் 

இடையே அமைந்திருக்கும் டன்மார்க்கிற்கு அடங்கிய சுயாட்சியுடைய தீவுகள் Faroe Islands) 

ஆகிய நாட்டு மொழிகளிலும் பயிலப்படுகின்றது


நோர்வே-Jul/Jol

சுவீடன்- Jul

டன்மார்க்-Jul

பின்லாந்து-Joulu

ஐசுலாந்து-Jól

பாரோய் தீவுகள்-Jól

எசுத்தோனியா- Jõulud



கிறித்தவமதம் பரவமுன்னம் இருந்த மிகப்பழைய நொர்ரோன் மதத்தில் (Old Norse religion) 

சூரியனின் பயணத்தைப் பின்பற்றிக் கடைப்பிடிக்கப்பட்ட நல்லநாள்பெருநாள்களில்

ஒன்று தான் யூல்.


சூரியனின் தென்புலப் பயணம் சூன் மாசம் 23 அளவில் துவங்கி திசம்பர் 21 அளவில் முடியும்.

அதே போல வடதிசைப்பயணம் திசம்பர் 22மட்டில் துவங்கி சூன் 22இல் நிறைவடையும்.


திசம்பர் 21 இருள் நீண்டும்ஒளி குறைந்துமுள்ள ஒரு தினம்

அதன் பின் சூரியனின் வடதிசைப் பெயர்வு ஆரம்பிக்கின்றது

அந்தச் சூரியப் பெயர்வைக் கொண்டாடும் ஒரு விழாதான் யூல்

யூல் என்ற பெயரைத் தனதாக்கிக் கொண்டு கிறித்தவமதம் அதனை இயேசுபாலன் பிறந்த

நாளின் அடையாளமாக்கிக் கொண்டது

ஆனாலும் இசுக்கந்திநேவிய நாடுகளில் பழைய நொர்ரோன் சமயத்தின் சுவடுகள் இன்றும் யூல்கொண்டாட்டங்களில் தொடர்கின்றன.


எடுத்துக்காட்டாக நிஸ்ஸன்(nissen) எனப்படும் மிகமிகக் குறுகிய மனிதவுருக் கொண்டகாவல் காக்கின்றகண்ணில் படாத மனிதரல்லாத குறளிப்பேய்கள்.(?)

இவர்கள் வீடு வாசல்நிலபுலம்பண்ணைகால்நடைகள் என்பவற்றைப் பாதுகாப்பவர்கள் 

என்பது பழைய நம்பிக்கை

இவர்களை கும்பிட்டு வணங்கும் பழக்கமில்லை. ஆனால் பயப்படும் பழக்கம் இருந்திருக்கின்றது.

இந்த இருள் நீண்ட நாட்களில் குறிப்பாக நத்தார்க் காலங்களில் கால்நடைக் கொட்டாரத்தில் இந்த நிஸ்ஸர்களுக்கு பாற்கஞ்சி வைப்பார்கள்

அதை எலிகளோ அல்லது வேறு விலங்குகளோ தின்று தீர்த்திருக்கலாம்அது வேறு கதை

கீழே வருகின்ற சுட்டியை அழுத்தி இந்தவிளம்பரத்தைப் பாருங்கள்வேடிக்கையானது

கொஞ்சம் இந்த நிஸ்ஸன் பற்றிய ஒரு புரிந்துணர்வையும் தரும்.


https://youtube.com/watch?v=n4LIvzC4nJI&feature=share






திருவருகைக்கால/காத்திருப்புக்கால முதலாம் ஞாயிறில் கத்தரிப்பூநிறத்தில் நாலு

மெழுகுதிரிகள் பொருத்தியவிளக்குத்தண்டில் முதலாவது மெழுகுதிரி ஏற்றப்படும்

ஊர்மத்தியில்வட்டாரங்களின் மத்தியில் நத்தார்மரங்கள் மின் விளக்குகளால் 

அலங்கரிக்கப்பட்டு ஒளியேற்றப்படும்வீடுகளின் சன்னல்களில் நத்தார்வெள்ளி விளக்கு

ஏழுதலை விளக்கு என்பன வைக்கப்படும்ஊதா வண்ணத்தில் மேசைவிரிப்புக்கள்

கைதுடைக்கும் காகிதத்துண்டுகள் போன்றவை பாவனைக்கு வரும்


இந்த காத்திருப்புக்கால விளக்குத்தண்டில் முதலாம் ஞாயிறில் ஒரு விளக்கு, இரண்டாம் ஞாயிறில் இரண்டு விளக்கு, மூன்றாம் ஞாயிறில் மூன்று விளக்கு , நாலாம் ஞாயிறில் நாலாவது விளக்கு என்று  ஏற்றப்படும்.






வடந்தைக்காலத்தும் புலம்பெயராத பறவைகள்குருவிகள் தீனுக்குச் சரவல் படும்

அவைகளுக்குத் தீனாக தானிய அரிக்கட்டு ஒரு மரத்தில்/கம்பத்தில் தூக்கிக் கட்டிவிடுவார்கள்.




வீடுகளில் பலவித கள்ளத்தீன்களும் செய்து சேர்த்து வைப்பார்கள். 

பலவிதமான பணிகாரங்கள் 



யூலமன்னா 


ஊரிலே இஞ்சி விசுக்கோத்து கடையில் வாங்கித் தின்றிருக்கின்றோம். அந்த மாக்கலவையில் இப்படி இஞ்சி விசுக்கோத்து வீடு செய்வார்கள்.


இஞ்சி விசுக்கோத்து வீடு 




மேற்சொன்ன யூலமன்னா, இஞ்சி விசுக்கோத்து வீடு தயாரிப்பதற்கு வீட்டிலுள்ள குஞ்சு, குழுவான்களையும் கூட்டுச் சேர்த்து இறங்கி விடுவார்கள். பள்ளிகளிலும் இந்த நடவடிக்கை இருக்கும்.


நான் பள்ளியொன்றில் பணிபுரிவதால் அங்கு நடக்கும் நடப்புக்களைக் கூடுதலாக இங்கே தருகின்றேன்.


பள்ளிகளில் இந்தத் திருவருகைக்கலப்பு பகுதி நல்ல இனிமையான கலகலப்பான நாட்களாய் அமையும். ஒவ்வொரு பிள்ளையும் மிகவும் குறைந்த விலையில் ஒரு பரிசுப்பொருளை வாங்கிப் பொதிந்து கொண்டுவந்து தருவார்கள். அவை எல்லாவற்றையும் சேர்த்து திருவருகைக்கால/காத்திருப்புக்கால நாட்காட்டி என்கின்ற ஒன்றை அமைப்பார்கள்.  ஒரு எடுத்துக்காட்டு இதோ.




திசம்பர் முதலாந் திகதியிலிருந்து நத்தாரின் முதல்நாள் எனச் சிறப்பித்துக் கொண்டாடப்படும் 24ந் திகதிவரை இந்தப் பொதிகள் ஒன்று அல்லது இரண்டு என்று சீட்டுக்கு குலுக்கலில் ஒவ்வொருத்தருக்கும் கிடைக்கும்.


திருவருகைக்காலத்தின்/காத்திருப்புக்காலத்தின் முதலாம் ஞாயிறுக்கு மைக்காநாள் திங்கட்கிழமை துவக்கம் ஒவ்வொருநாளும் முதலாம் பாடநேரம் ஆசிரியர்களும், மாணவர்களும் வணக்கம் கூறிய பின்னர் "காத்திருத்தல் பொழுது" டன் துவங்கும். கூரைவிளக்கை அணைத்துவிட்டு அந்த வெள்ளாப்பு வேளையில் மெழுகுதிரி வெளிச்சத்தில் நத்தாரைப் பின்னணியாகக் கொண்ட கதைப்பொத்தகத்தில் நாளொன்றுக்கு ஒரு அத்தியாயம் ஆசிரியர் வாசிப்பார். அந்தக் கதைகளில் சமயப்போதனை இராது. பிள்ளைகள் அமைதியாக இருந்து கேட்பார்கள். பின் ஒருசில நத்தார்ப் பாடல்களைப் பாடியபின் குலுக்கலில் பெயர் வரும் பிள்ளைக்கு பரிசுப்பொதி கிடைக்கும். 






திசம்பர் 13ந் திகதி சாந்த லூசியா தினம் இசுக்காந்திநேவிய நாடுகளில் கொண்டாடப்படும். இருள்மண்டிய ஒளிகுறைந்த காலத்தில் நம்பிக்கை ஒளியேற்றி உதவி சாந்த லூசியா வருவதாக ஒரு நம்பிக்கை. இது சுவீடனில் இன்னும் சிறப்பாகக் கொண்டாடப் படும் என்கின்றார்கள். காலையில் இருள்பிரியாமல் பிரியும் வெள்ளாப்பில் (காலை8:30-9:00வரை) முதலாம் வகுப்புப் பிள்ளைகளுக்கு வெள்ளையாடை அணிவித்து, கைகளில் மின்குமிழ் மெழுகுதிரிகளையும் கொடுத்து ஊர்வலமாகப் போகவைப்பார்கள். அதில் ஒரு பிள்ளையின் தலையில் மின்குமிழ் மெழுகுதிரி பொருத்திய முடியை வைப்பார்கள். இந்தப் பிள்ளைகள் சாந்த லூசியாவைப் பற்றிய பாடலைப் பாடியபடி ஒவ்வொரு வகுப்பாகப் போய் எல்லா மாணவர்களுக்கும் தாங்கள் முன்கூட்டியே தயாரித்து வைத்திருந்த ஒருவகை சீனியப்பத்தை(BUNS) வழங்குவர். அந்தநாள் இவ்வாறு இனிமையாக அமையும். இம்முறை நோய் தடுப்பு நடவடிக்கையாக இப்படி வகுப்புக்கள் எல்லாம் செல்வதைத் தவிர்த்து, பள்ளிக்கூடக் கட்டிடத்தைச் சுற்றிப் பாடியபடி ஊர்வலம் சென்றார்கள்.






வகுப்புக்களில் "நத்தார் தொழிலகம்" (Juleverkstad) என்று சொல்லிக்கொண்டு பலவகைக் கைவினைப் பொருட்களும் பிள்ளைகள் செய்வார்கள். அவைகளை நத்தார்ப் பரிசுகளாக பிள்ளைகள் தத்தம் குடும்பத்தவருக்கு பொதிந்து வைப்பார்கள். அத்துடன் யூலமன்னா, இஞ்சி விசுக்கோத்து என்பவையும் செய்யப்படும். 








பெற்றோர், பேரன்பேத்தி ஆகியோர் வந்து கலந்து கொள்ளும் "நத்தார்மர விழா"வில் (Juletrfest)  நடித்தும் பாடியும் நிகழ்ச்சிகளை வழங்க பிள்ளைகளைப் பழக்குவார்கள். சில பள்ளிகளில் நத்தார் விடுமுறைக்கு முன்பாக ஒரு பின்னேரத்திலும், சிலவற்றில் திசம்பர் 27-30ந் திகதிகளில் ஒரு பின்னேரப் பொழுதிலும் இந்த நத்தார்மர விழா நடைபெறும். பாலன்பிறப்பை காட்டாமல் ஒரு நத்தார்விழா இருக்காது தானே? அது நாடகமாக நடிக்கப்படும். நிகழ்ச்சிகள்  

1-4ம் வகுப்புவரை பாலர்தளம், 5-7ம் வகுப்புவரை நடுத்தளம், 8-10ம் வகுப்புவரை இளந்தாரித்தளம் என்ற பிரிவுகளின் படி எல்லாப்பிள்ளைகளும் தம் பங்களிப்பை வழங்குவர். 10ம் வகுப்புப் பிள்ளைகள் நிஸ்ஸராக, நிஸ்ஸப் பெண்மணியாக, நிஸ்ஸப் பிள்ளைகளாக வேடமிட்டு, வந்து பரிசுகள் வழங்குவர். அது எல்லாப்பிள்ளைகளையும் மகிழவைக்கும் ஒரு செயல். பெயர்ந்து நத்தார் மரத்தைச் சுற்றிப் பலவட்டங்களாகக்  கை கோர்த்து அங்கு வந்திருக்கும் அனைவரும் நத்தார்ப் பாடல்களைப் பாடுவர். சிலபாடல்களை அசைவுகளுடன் பாடுவர்.







நத்தார் விடுமுறை துவங்குமுன் வரும் பள்ளிக்கூடக் கடைசிநாளில் அநேகமான பள்ளிகள்  தேவாலயங்களில் நடைபெறும் வழிபாட்டில் கலந்து கொள்ளும். இம்முறை அது வகுப்புக்களில் இருந்தபடியே திரையில் பார்த்தபடி பங்குபற்றப் பட்டது. அந்த வழிபாட்டை ஏற்காதவர்களின் பிள்ளைகளுக்காக பள்ளிகளில் வேறு ஏதும் சில நடவடிக்கைகளை/ பாடத்தை அமைத்திருப்பார்கள். அந்தக் கடைசி நாளில் சோடாவும், இனிப்புள்ள பணியார வகைகளும் கொண்டு வர அனுமதிக்கப்படும். விடைபெறும் போதில் "நல்ல நத்தார்" என்ற வாழ்த்துரையை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வார்கள்.


அநேகமான வேலைத்தலங்களில் ஒரு வெள்ளிக்கிழமை இரவு நத்தார் விருந்து(Julebord) அமைப்பார்கள். அங்கே பலவகை நத்தாருக்கான உணவுகள் பரிமாறப்படும். பணிவழங்குபவரும், பணிபுரிபவர்களும் ஒன்றாக கூடிக்களிக்கும் விருந்தாக அது இருக்கும். அனைவரும் விழாவுக்குரிய ஆடைகள் அணிந்து வருவார்கள். மதுபானம் சில இடங்களில் சிறிது வழங்கப்படும். பிறகு மேலதிகமானதை அவரவர் வாங்கிப் பாவிப்பார்கள். பாட்டுக்குழு பாடலிசைக்க விருந்தினர் நடனம் ஆடுவார்கள். இரவு ஒரு 3, 4மணி வரை கூட அது நீடிக்கலாம்.


திசம்பர் 24 ஐ (Julaften - Christmas ve) நத்தார் முன்னிரவு என்பர். அன்று அலங்காரத்தில் கத்தரிப்பூ நிறம் போக சிவப்பு நிறம் பாவனைக்கு வரும். கத்தரிப்பூ நிறம் காத்திருப்புக்கு காலத்துக்கும், சிவப்புநிறம் நத்தாருக்கும் உரியதாம்.

திசம்பர் 23 ஐ (Lille Julaften- Little Christmas Eve) சின்ன நத்தார் முன்னிரவு என்பர்.

திசம்பர்  23 இல்தான் பலரும் நத்தார் மரத்தை தங்கள் வீட்டு மண்டபத்தில் நட்டு சோடிப்பார்கள்.

திசம்பர் 24 இல் மத்தியானம் ஒருமணிக்கு கடைகண்ணியெல்லாம் அடித்துப் பூட்டப்படும். எரிபொருள் நிலையம் கூட பூட்டப்பட்டு விடும். கப்பல், பேருந்துகளின் ஓட்டம் இராது. 

சனமெல்லாம் "ஆவறுதி போவறுதி" என்று தங்கள் தங்கள் வீடுகளுக்குள் அடைந்து விடும்.

பிற்பகல் 5மணிக்கு தேவாலயத்தில் வழிபாடு. விழாக்குரிய கோலத்தில் சனங்கள் தேவாலயம் போகும். பெயர்ந்து ஆறரை ஏழு மணிக்கெல்லாம் வீடு திரும்பி விடுவார்கள். 

வீட்டில் நத்தார் விருந்து நடக்கும். உணவுண்டபின் நத்தார்மரத்தின் அடியில் இருக்கும் பரிசுப்பொருட்களை பிரித்துப் பார்த்து மகிழ்வார்கள். இதற்கிடையே சிறுபிள்ளைகள் உள்ள வீடுகளுக்கு நத்தார்த்தாத்தா  வேடமணிந்த உறவினர்/குடும்பநண்பர் வந்து, நத்தார்த்தாத்தா பரிசு கொண்டு வந்ததாகப் பாவனை காட்டிப் பரிசு வழங்கிச் செல்வார். 

பேந்து என்னத்தைப் பறைவான்? வெளியாலே தெருவிலே ஒரு குருவி பறக்காது. படு பயங்கர அமைதி. குளிருக்காக அடைத்து மூடிய வீடுகள் என்பதால் உள்ளே அவர்கள் போடும் சத்தஞ்சலார் ஒன்றுமே வெளியே கேளாது. 

திசம்பர் 25, முதலாவது நத்தார் நாள்; 26, இரண்டாவது நத்தார் நாள் எல்லாம் ஒரு கடைகண்ணி திறவாது. 27- 30 ந் திகதிவரை குறுகியநேரம் கடைகள் திறக்கும். திரும்பவும் 31ந் திகதி பிற்பகல் ஒரு மணியுடன் வழமையான கடைகள் பூட்டினாலும் எரிபொருள் நிலையங்கள் திறந்திருக்கும்.


நத்தாருக்கும் புத்தாண்டின் முன்னிரவு நாளுக்கும் இடைப்பட்ட நாட்களை Romjul றொம்யூல் என்பர். இந்த நாட்களில் உறவினர் நண்பர்கள் வீடுகளில் கூடி மாறிமாறி விருந்தாடுவார்கள்.


சனவரி 6ந் திகதியுடன் வீட்டினுள் நட்ட நத்தார் மரம் வெளியேற்றப்படும். அலங்காரங்கள் மாற்றப்படும். இஞ்சி விசுக்கோத்து வீடு நொருக்கப்படும். இனி அடுத்த நத்தாரை நினைத்துப் பிள்ளைகள் காத்திருப்பார்கள்.


"God Jul ! " (gகூ யூல்!)

"இனிய நத்தார் வாழ்த்துக்கள்"














Kommentarer